

நாமக்கல்:
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தயாராகும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி நடவடிக்கைகளை விதிமுறைகளுடன் மேற்கொள்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. 15 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் பயிற்சிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
தடகளம், வளைகோல்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கு சமூக இடைவெளியுடன் பயிற்சிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும். தேக்வாண்டோ, ஜூடோ, கபடி, கராத்தே, குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளுக்கு உடற்பயிற்சிகள் மட்டும் அனுமதி வழங்கப்படும். குழு விளையாட்டில் தனிப்பட்ட விளையாட்டு நுணுக்கங்களை கற்றுக் கொள்ள குறைந்த நபர்களுடன் சமூக இடைவெளியுடன் பயிற்சிகள் வழங்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்ள வரும் வீரர், வீராங்கனைகளுக்கு உடலின் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படும். அனைவரும் முககவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் வீரர், வீராங்கனைகள் தனித்தனியாக உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.
விளையாட்டு உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. பயிற்சிக்கு முன்பும், பின்பும் கிருமிநாசினி மூலம் கைகளை நன்றாக கழுவ வேண்டும். மேலும் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சி அளிப்பவர்கள் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்திட வேண்டும்.
அரசின் மறு உத்தரவு வரும் வரை உடற்பயிற்சிகூடம் மற்றும் நீச்சல்குளம் திறக்கப்பட மாட்டாது. பயிற்சிகள் மேற்கொள்பவர்கள் அதற்கான விண்ணப்பத்தை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் இருந்து பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.