பெரியகுளத்தில் கோவில் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

பெரியகுளம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெரியகுளத்தில் கோவில் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
Published on

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் பிரசித்தி பெற்ற லெட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 1 வருடத்துக்கு முன்புதான் ரூ.40 லட்சம் செலவில் பிரம்மாண்டமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று இரவு கோவிலின் பின்புறம் உள்ள மேல்நிலைப்பள்ளி காம்பவுண்டு சுவர் வழியாக மர்ம நபர்கள் ஏறி வந்தனர். அந்த கும்பல் கோவிலின் முன்புற கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். கோவிலில் இருந்த உண்டியலை கையோடு பெயர்த்து எடுத்ததுடன் அம்மன் கழுத்தில் இருந்த தாலி, வெள்ளிக் கயிறு மற்றும் அங்கிருந்த நகைகளையும் அள்ளிச் சென்றனர்.

இன்று அதிகாலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப்பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தென்கரை போலீசாருக்கு புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மதுரையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்படுகிறது.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்களை பதிவு செய்தனர். பெரியகுளம் பகுதியில் நடந்த இந்த கொள்ளை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com