

பெரியகுளம்:
பெரியகுளம் அருகில் உள்ள தேவதானப்பட்டி போலீஸ் சரகம் காமக்காபட்டி செக்போஸ்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மின்னல் வேகத்ததில் வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பாறைகளை வெடிக்க பயன்படுத்தும் கரிமருந்து 100 கிராம், உரிமம்பெற்ற துப்பாகக்கிக்கு பயன்படுத்தப்படும் 12 நம்பர் தோட்டா 20, பரளை எனப்படும் ரவை ½ கிலோ ஆகியவை இருந்தது.
இது குறித்து காரில் வந்தவர்களிடம் விசாரித்தபோது திண்டுக்கல்லில் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.
இருந்தபோதும் தடை செய்யப்பட்ட பொருட்களை வாகனத்தில் கடத்தி வந்ததால் போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
இதனை கடத்தி வந்த கொடைக்கானல் அட்டுவம் பட்டியை சேர்ந்த அமல்ராஜ் (வயது43), பாக்கியபுரம் மாதாகோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (30), கொடைக்கானல் அம்பேத்கார் நகர் கல்லுக்குழியை சேர்ந்த வீரசெல்வம் (24), காளிமுத்து (25), அட்டுவம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வினோத் என்ற மரியதாஸ் (29) ஆகிய 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் எதற்காக வெடிபொருட்கள் மற்றும் தோட்டாக்களைஎடுத்து வந்தனர். வேறு அசம்பாவித சம்பவங்களுக்கு பயன்படுத்த கொண்டு சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.