

பேராவூரணி:
பேராவூரணி சேது சாலையில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் மற்றும் பயணியர் விடுதி சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் ஒருபுறம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் குடியிருப்பு அமைந்துள்ளது.
நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகத்தில் தென்னை, மா, பலா, தேக்கு உள்ளிட்ட 50 ஆண்டு பழமை வாய்ந்த பழைய மரங்கள் உள்ளன. இங்கிருந்து அரசு விடுமுறை நாட்களில் இரவு நேரங்களில் மர்ம கும்பல் திருட்டுத்தனமாக மரங்களை வெட்டிக் கடத்தி உள்ளதாக சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சுமார் 50 அடி உயர மரத்தின் மதிப்பு சுமார் 1 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.