

பெரம்பூர்:
சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு அடுத்ததாக பெரம்பூர் நிலையம் அதிக பயணிகளை கையாளக்கூடிய நிலையமாக உள்ளது.
திருத்தணி, திருவள்ளூர், அரக்கோணம் போன்ற புறநகர் பகுதிகளுக்கு செல்லக்கூடிய அனைத்து மின்சார ரெயில்களும் இங்கு நின்று செல்லும். மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும், கோவை வழியாக கேரளாவிற்கும் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்களும் சென்னை வரும் போது நிற்கும்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ரெயில் நிலையத்தில் நள்ளிரவு ஒரு வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண் டார். நள்ளிரவு நேரத்தில் பயணிகள் நடமாட்டம் அங்கு இருக்காது. டிக்கெட் கவுண்டரும் செயல்படாது.
நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென 1-வது பிளாட்பாரத்தில் ஒருவர் தீப்பற்றி எரிந்தார். உயிரோடு ஒருவர் உடலில் தீப்பற்றி எரியும் அலறல் சத்தம் கேட்டு ரெயில்வே போலீசாரும் சாலையில் சென்ற சிலரும் காப்பாற்ற ஓடினர்.
அவர் பாட்டிலில் பெட்ரோல் கொண்டு வந்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டது தெரிய வந்தது.
அவரது உடலில் பற்றிய தீயை சாக்கு மூலம் அணைத்தனர். பின்னர் ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலையில் அவர் இறந்தார்.
இது குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் தீக்குளித்து தற்கொலை செய்தவரின் பெயர் இளைய ராஜா (30) செங்குன்றம் பாடியநல்லூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.