பெரம்பலூர், தா.பழூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருமாவளவன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக்கோரி பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பெரம்பலூர்:

பெண்களை இழிவுபடுத்துவதாக மனுதர்மம் என்ற நூலை தடை செய்யக்கோரியும், திருமாவளவன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக்கோரியும் நேற்று மாலை பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் விவசாய தொழிலாளர்கள் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் செங்கோலன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் கிட்டு, நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் மன்னர்மன்னன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் வக்கீல் ஸ்டாலின், உதயகுமார் உள்ளிட்ட கட்சியனர் மற்றும் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் கடைவீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தா.பழூர் நகர செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். இதில், பெண்களை இழிவுபடுத்துவதாக கூறி மனுதர்ம நூலை தடை செய்யக்கோரியும், திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற கோரியும் கோஷங்கள் எழுப்பினர். முன்னாள் மாவட்ட துணை தலைவர் பாலு, மாநில துணை செயலாளர் தமிழ்மணி, மாவட்ட அமைப்பாளர் வடிவேல் மற்றும் வேல்முருகன், ஒன்றிய பொறுப்பாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com