பெரம்பலூர் அருகே தீ விபத்தில் குடிசைகள் எரிந்து நாசம்

பெரம்பலூர் அருகே குடிசை பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் குடிசைகள் எரிந்து நாசமாகின.
பெரம்பலூர் அருகே தீ விபத்தில் குடிசைகள் எரிந்து நாசம்
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி ஊராட்சி கிழக்குத்தெருவை சேர்ந்தவர்கள் தங்கவேல் (வயது 60), பிச்சை (50), இவரது தம்பி தனபால் (45), கணேசன் (57). இவர்களது குடிசைகள் அருகருகே உள்ளன. அதே தெருவில் சற்று தூரத்தில் ராஜமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான குடிசையில் செல்லம்மாள் (65) என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் அனைவரும் தொழிலாளர்கள்.

நேற்று காலை திடீரென தங்கவேல் குடிசை தீப்பற்றி எரிந்தது. இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள 4 குடிசைகளும் தீப்பற்றி எரிய தொடங்கின. ஒரு குடிசையில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால், செல்லம்மாள் குடிசைக்கும் பரவியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். தீ கட்டுக்குள் அடங்காமல் போனதால் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பெரம்பலூர் மற்றும் வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் குடிசைகள் எரிந்து நாசமானது. ஆனால் 3 மணிநேரம் போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தீ விபத்து நடந்த சமயத்தில் யாரும் வீட்டில் இல்லை. அனைவரும் வயல்காடுகளுக்கு கூலிவேலைக்கு சென்றுவிட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் ரூ.6 லட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வருவாய் துறையினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com