பெரம்பலூர் அருகே கூட்டுறவு சங்க தேர்தலில் மோதல்- ஓட்டுப்பெட்டிகள் உடைப்பு

பெரம்பலூர் அருகே கூட்டுறவு சங்க தேர்தலுக்கான ஒட்டுப்பதிவு தொடங்கிய போது மர்மநபர்கள் சிலர் தேர்தல் நடக்கும் அறைக்குள் புகுந்து அங்கிருந்த டேபிள், நாற்காலிகள், ஓட்டுப்பெட்டிகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.
கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சங்க தேர்தலில் ஏற்பட்ட மோதலில் நாற்காலிகள் உடைக்கப்பட்டு கிடந்ததை படத்தில் காணலாம்.
கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சங்க தேர்தலில் ஏற்பட்ட மோதலில் நாற்காலிகள் உடைக்கப்பட்டு கிடந்ததை படத்தில் காணலாம்.
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர் தேர்தலில் அ.தி.மு.க-தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டது.

நேற்று தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. அப்போது அங்கு கும்பலாக வந்த சிலர், தேர்தல் நடக்கும் அறைக்குள் புகுந்து அங்கிருந்த டேபிள், நாற்காலிகள், ஓட்டுப்பெட்டிகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.

தொடர்ந்து வாக்குச்சீட்டு உள்ளிட்ட தேர்தல் தொடர்பான ஆவணங்களை கிழித்து தீ வைத்து எரித்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஆத்தூர்- பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தி.மு.க.வினர் கூறும் போது, அ.தி.மு.க.வினர் கலவரத்தை ஏற்படுத்தி தேர்தலை ரத்து செய்துவிட்டு, தங்கள் கட்சியினர் வெற்றி பெற்றதாக அறிவித்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றனர். எனவே தேர்தலை ரத்து செய்யாமல் மீண்டும் நடத்துவோம் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தால் தான் மறியலை கைவிடுவோம் என்றனர்.

தொடர்ந்து தேர்தல் அதிகாரி மணிமேகலை தேர்தலை ரத்து செய்யாமல் ஒத்தி வைப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி, வெங்கனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் அ.தி.மு.க.வினர் தேர்தலை நடத்த விடாமல் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கும் தேர்தல் நடக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா காரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்க தயாராக இருந்தபோது, அலுவலர்கள் குளறுபடி செய்து விட்டதாகக் கூறி, சிலர் வாக்குச்சாவடி முன்பு அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலை பிடுங்கியும், நாற்காலிகளை தூக்கி எறிந்தும், வாக்குச்சாவடி முன்பு ஒட்டப்பட்டிருந்த வேட்பாளர் பட்டியலை கிழித்தும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com