

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை குப்பையன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் திவ்யபாரதி (வயது 17), பிளஸ்-2 முடித்துள்ளார்.
இந்தநிலையில் திவ்யபாரதிக்கு நெஞ்சில் அடிக்கடி வலி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அவரை அவரது பெற்றோர் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில் திவ்ய பாரதியின் நெஞ்சில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திவ்யபாரதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் அவருக்கு வலி குணமாகவில்லை. இதையடுத்து திவ்யபாரதியை அவரது பெற்றோர் மீண்டும் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் கட்டி இருக்கும் நெஞ்சு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யாமல் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்தது பரிசோதனையில் தெரியவந்தது.
எனவே இதற்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திவ்யபாரதியின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். #Tamilnews