வரும் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களுக்கு டெல்லி தேர்தல் முடிவு முன்னுதாரணம் - ப.சிதம்பரம்

2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக டெல்லி தேர்தல் முடிவு விளங்குகிறது என பசிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
Published on

புதுடெல்லி:

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 8–ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடந்தது. அங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி தங்களது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஏமாற்று வேலை மற்றும் வெற்று கோ‌ஷம் தோல்வி அடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லியில் வாழும் மக்கள், பா.ஜ.க.வின் ஆபத்து மிகுந்த பிரித்தாளும் சூழ்ச்சி மற்றும் வகுப்புவாத அரசியல் திட்டங்களை தோற்கடித்து உள்ளனர். 

வரும் 2021 மற்றும் 2022–ம் ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ள டெல்லி மக்களை நான் வணங்குகிறேன்.

மேலும், டெல்லி ஒரு மினி இந்தியா என்பதால் அம்மாநில தேர்தல் அகில இந்திய வாக்கெடுப்புக்கு ஒப்பானது எனவும் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com