

ராமேசுவரம்:
ராமேசுவரம் நகராட்சி கமிஷனர் வீரமுத்துக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமேசுவரம் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் ராமேசுவரம் நகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி,குடிநீர் கட்டணம், தொழில் வரி, கடை வாடகை, குத்தகை இனங்கள், மற்றும் தொழில் உரிமம் கட்டணம் ஆகியவற்றை நிலுவையின்றி உடன் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் வரி மற்றும் கட்டணங்களை செலுத்த தவறும் பட்சத்தில் வீட்டு குடிநீர்குழாய் இணைப்புகளை துண்டித்து, பின்னர் ஜப்தி நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் நலன் கருதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கணினி வரி வசூல் மையம் இயங்கும். தமிழக அரசின் ஆணைப்படி சொத்துவரி உயர்வு செய்யப்பட்டது ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே 1-4-2018 -க்கு முந்தைய உள்ள பழைய சொத்து வரியை பொது மக்கள் செலுத்த வேண்டும். பொதுமக்கள் நகராட்சி அலுவலக கணினி வசூல் மையத்தில் தங்களது வரிகளை நிலுவையின்றி உடனடியாக செலுத்தி மேல்நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.