பட்டுக்கோட்டை, பாபநாசத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை மற்றும் பாபநாசத்தில் சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வீராசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் ரவிச்சந்திரன், அரசு ஊழியர் சங்க பட்டுக்கோட்டை வட்ட தலைவர் அறிவழகன், செயலாளர் ஞானசூரியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய வகையில் பள்ளி சத்துணவு மையங்கள் மூலமாக உணவு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 40 வயதுக்கு மேல் உள்ளவர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதேபோல் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழக முதல்-அமைச்சரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சோமநாதராவ் தலைமையில் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பாபநாசம் ஒன்றிய தலைவர் மேரி, செயலாளர் ஸ்ரீவித்யா, துணைத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சத்துணவு உண்ணும் மாணவ-மாணவிகளுக்கு சமைத்து வழங்காமல் சத்துணவுக்கான பணத்தை பெற்றோர் வங்கி கணக்கில் அரசு செலுத்துவதை கைவிட கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com