

கொல்கத்தா:
குஜராத் மாநிலங்களவை தேர்தலில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, அண்மையில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிட்டனர்.
இதற்கிடையே குஜராத் சட்டசபையில் நேற்று முன் தினம் நடந்த மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், ராஜினாமா செய்த 6 எம்.எல்.ஏ.க்கள் தவிர மீதமுள்ள 176 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.க.விற்கு வாக்களித்ததை வெளியே காண்பித்ததால் சர்ச்சை ஏற்பட்டு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி நள்ளிரவில் தான் நடைபெற்றது.
இறுதியாக வெற்றிக்கு தேவையான வாக்குகளை பெற்று காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் மாநிலங்களவை பதவியை தக்க வைத்துக் கொண்டார்.
இந்நிலையில், குஜராத் மாநிலங்களவை தேர்தலில் அகமது பட்டேலுக்கு கிடைத்துள்ள வெற்றி, மதவாத சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் போராட்டத்தின் அடையாளம் என்று மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் கூறியுள்ளார்.
நாட்டில் கடந்த மூன்று வருடங்களாக மதவாத சக்திகள் தலை தூக்கி வருவதாகவும், அதனை தடுக்கவும் பரவ விடாமல் செய்யவும் காங்கிரஸ் கட்சி செய்து வருவதாக தெரிவித்தார்.