

கரூர்:
கோவையில் இருந்து கரூர் நோக்கி நேற்றிரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. அதில் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை கரூர் அருகே உள்ள க.பரமத்தி பகுதியில் செல்லும் போது திடீரென தாறுமாறாக ஓடியது. இதனால் தூங்கி கொண்டிருந்த பயணிகள் விழித்தனர்.
அப்போது எதிரே வந்த லாரியின் மீது மோதுவது போல் சென்றதால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே டிரைவரிடம் பஸ் நிறுத்துமாறு கூறி, பஸ்சில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்தனர். அப்போது பஸ்சின் முகப்பு விளக்குகள் எரியாமல் இருந்ததும், அப்படியிருந்தும் டிரைவர் பஸ்சை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பயணிகள் அனைவரும் டிரைவரை முற்றுகையிட்டு முறையிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பஸ்சில் வந்த பயணிகள் மற்றொரு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.