கோத்தகிரி குடியிருப்பு பகுதிக்கு அருகே குட்டிகளுடன் உலாவரும் கரடியால் பீதி

கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதிக்கு அருகே தனியார் தேயிலை தோட்டத்திற்குள் குட்டிகளுடன் உலாவரும் கரடியால் பீதியடைந்துள்ளனர். கூண்டுவைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன் உலா வரும் கரடியை படத்தில் காணலாம்.
தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன் உலா வரும் கரடியை படத்தில் காணலாம்.
Published on

கோத்தகிரி:

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டு யானை, புலி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் நடமாடி வருகின்றன. இதன் காரணமாக அவ்வப்போது மனித வன விலங்கு மோதல்களும் நிகழ்ந்து, அதனால் மனிதர்கள் காயமடைவதும், அவ்வப்போது உயிரிழப்புக்கள் ஏற்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில் கோத்தகிரி ராம்சந்து சதுக்கத்திலிருந்து கிளப் ரோடு செல்லும் சாலைக்கு அருகாமையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் ஒன்றில் கடந்த சில தினங்களாக இரண்டு சிறிய குட்டிகளுடன் தாய் கரடி ஒன்று உலா வந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக அந்த தோட்டத்திற்கு தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும் கரடி முகாமிட்டுள்ள தேயிலை தோட்டத்தை சுற்றிலும் உள்ள கல்பனா காட்டேஜ், கிளப் ரோடு, ரைபிள் ரேஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்து உள்ளதால் அப்பகுதி குடியிருப்புவாசிகளும் பீதியடைந்துள்ளனர்.

மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், தற்போது கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் பெரும்பாலான பகுதிகளில் நாவல் பழம் சீசன் தொடங்கியுள்ளதால் மரங்களில் உள்ள அந்த பழங்களை உண்பதற்காக வனப்பகுதியில் இருந்து கரடிகள் வெளியே வந்து தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் சுற்றித் திரிகின்றன. இந்த கரடிகளால் பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன், கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவோ அல்லது கூண்டு வைத்து பிடிக்கவோ வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com