அரியானா சாமியார் வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் விசாரணை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

கற்பழிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் அரியானா சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனி பிரீத்தின் விசாரணை காவல் மேலும் மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹனிப்ரீத்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹனிப்ரீத்
Published on

சண்டிகர்:

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டது.

இந்த வன்முறையில் 38-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். வன்முறையின் போது குர்மீத்தின் ஆதரவாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததோடு, பொதுச் சொத்துக்களையும் பெருமளவில் சேதப்படுத்தினர்.

இந்த கலவரம் தொடர்பாக அரியானா மாநில போலீசார் 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

ரகசிய இடத்தில் பதுங்கி இருக்கும் ஹனி பிரீத், பிரபல ஆங்கில ஊடகத்துக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். தனது தந்தை நிரபராதி என்று குறிப்பிட்ட அவர், ராம் ரகீம் சிங் கைதானபோது நடைபெற்ற கலவரங்களை கண்டு அதிர்சியடைந்ததாக தெரிவித்தார்.

அரியானா அல்லது டெல்லி ஐகோர்ட்டில் அவர் சரணடையப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், பஞ்சாப் மாநிலம், ஜிராக்பூர்-பாட்டியாலா சாலையில் ஹனி ப்ரீத்தை அரியானா மாநில போலீசார் கைது செய்தனர்.

கடந்த 4-ம் தேதி பஞ்சகுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹனி பிரீத்தை ஆறுநாள் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தி நீதிபதி அனுமதி அளித்தார்.

அந்த அனுமதி இன்றுடன் முடிவடைந்த நிலையில் ஹனி பிரீத் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது விசாரணை காவலை நீட்டிக்க வேண்டும் என போலீஸ் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, ஹனி பிரீத்தின் காவலை மேலும் மூன்று நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com