

பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று மாலை பல்லடம் ஜே.கே.ஜே. காலனியை சேர்ந்த மூர்த்தி (வயது 35) என்பவர் வந்தார். அங்கு மதுவாங்கி குடித்தார். போதை தலைக்கு ஏறியதும் மீண்டும் மதுக்குடிக்க விரும்பினார். மதுவிற்பனையாளரிடம் மதுவேண்டும் என்றார். அதற்கு அவர் பணம்கேட்டார். பணம் இல்லை இலவசமாக மது கொடுங்கள் என்று கூறினார். ஆனால் விற்பனையாளர் மது கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் விரக்தியடைந்த மூர்த்தி மதுபாட்டிலை உடைத்து உடலை கீறினார்.
இதில் ரத்தம் வழிந்தது. இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மதுக்கொடுக்கவில்லை என்றால் இதே இடத்தில் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினார். ரத்தம் சொட்ட சொட்ட அந்த பகுதியிலேயே நடமாடினார். இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களிடமும் குடிக்க பணம் கேட்டு கெஞ்சினார்.
போலீசார் லாவகமாக பேசி மூர்த்தியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.