அரசியல் முடிவுகளை கோர்ட்டுகள் எடுக்க முடியாது - பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி பரபரப்பு பேச்சு

வாக்காளர்கள்தான் அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும், அரசியல் முடிவுகளை கோர்ட்டுகள் எடுக்க முடியாது என பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் முடிவுகளை கோர்ட்டுகள் எடுக்க முடியாது - பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி பரபரப்பு பேச்சு
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் ‘பனாமா கேட்’ ஊழலில், நவாஸ் ஷெரீப்பின் பிரதமர் பதவியை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு பறித்தது. இது அந்த நாட்டில் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அங்கு தேராகாஜிகான் நகரில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், பிரதமர் அப்பாசி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நவாஸ் ஷெரீப் பதவியை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு பறித்ததை சூசகமாக தாக்கினார். அவர் கூறியதாவது:-

வாக்காளர்கள்தான் அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும். அரசியல் முடிவுகளை கோர்ட்டுகள் எடுக்க முடியாது. அவை வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட வேண்டும்.

இங்கே யார் எல்லாம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறார்களோ, அவர்கள் எல்லாருமே கோர்ட்டுக்கு இழுத்தடிக்கப்படுகிறார்கள். அவர்களது பதவி பறிக்கப்படுகிறது. அவர்களை மக்களிடம் இருந்து அப்புறப்படுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன. இது வினோதமான ஒன்றாக அமைந்து உள்ளது.

இந்த கலாசாரம், பாகிஸ்தானின் கலாசாரம் அல்ல. இந்த கலாசாரம், பாகிஸ்தானில் அரசியலுக்கு மதிப்பு அளிக்காது.

நான் நாட்டு மக்களிடம் முழுமையான நம்பிக்கை வைத்து உள்ளேன். அவர்கள் வாக்குச்சாவடிகளில் அரசியல் சதிகளுக்கு பதில் அளிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com