

புல்வாமாவில் பிப்ரவரி 14ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
சமீபத்தில் இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலேவை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் சந்தித்தபோது, இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவை தெரிவித்தார். பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக "உறுதியான மற்றும் மீறமுடியாத நடவடிக்கை" எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்காவும் இந்தியாவும் கேட்டுக்கொண்டன.
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டொனால்டு டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுக்கு எதிராக வேறு எந்த முந்தைய அரசாங்கங்களும் எடுக்காத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்துவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.