பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரிக்கு ஜாமீன் கிடைத்தது

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஆசிப் அலி சர்தாரி
ஆசிப் அலி சர்தாரி
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஆசிப் அலி சர்தாரி. இவர், பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பெனாசீர் பூட்டோவின் கணவர் ஆவார்.

ஆசிப் அலி சர்தாரி, தனது பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்நாட்டு தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு விசாரணை நடத்தியது.

இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி தேசிய பொறுப்புடைமை குழு அதிகாரிகள் ஆசிப் அலி சர்தாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து, அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சர்தாரியின் உடல்நிலை மோசமடைந்ததால், சிறையில் இருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு கடந்த மாதம் கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், ஆசிப் அலி சர்தாரிக்கு மருத்துவ அடிப்படையில் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் சர்தாரி மேல் தொடரப்பட்ட இரண்டு வழக்குகளிலும் தலா ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாமீன் பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

சர்தாரி குறைந்த பிளேட்லெட் (இரத்த தட்டுகள்) எண்ணிக்கையுடன் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், இந்த நோய்களுக்கு சிறை வளாகத்திற்குள் இருந்துகொண்டு அவரால் சிகிச்சை பெற முடியாது என்றும் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com