

ராவல் பிண்டியில் நடைபெற்ற போட்டியில் சிந்து அணிக்கெதிராக பஞ்சாப் மாகாணம் அணி களம் இறங்குவதாக இருந்தது. மைதானத்திற்குள் வீரர்கள் களம் இறங்க வேண்டிய நிலையில் ஜூனைத் கான் மிஸ்சிங். இதனால் கோபம் அடைந்த உமர் அக்மல், சக வீரரான நாசிர் நிசிரிடம், ஜூனைத்கான் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உமர் அக்மல் கூறுகையில் ‘‘நான் மைதானத்திற்குள் சென்று கொண்டிருக்கும்போது ஜூனைத் கான் இல்லாதது தெரிந்ததும் ஏமாற்றம் அடைந்தேன். இது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அணியின் மானேஜர் மற்றும் பயிற்சியாளர் இணைந்து அவர் இன்று விளையாடமாட்டார் என்று என்னிடம் கூறினார்கள். கேப்டனாக இது எனக்கு அதிர்ச்சியளித்தது’’ என்றார்.
அதேநேரத்தில் ஜூனைத் கான் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ‘‘நான் இந்த போட்டியில் இருந்து ஓடிவிட்டதாக உமர் அக்மல் ஒரு உணர்வை ஏற்படுத்தியது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. உண்மையிலேயே, எனக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டது. இதுகுறித்து அணி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டேன். அவர்கள் என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டனர். அணி மருத்துவர் என்னை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.