ஜூன் 15-ல் நடந்தது என்ன?: பதிலை அறிய மக்கள் புதையல் வேட்டையில் உள்ளனர்- ப. சிதம்பரம்

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியதை வரவேற்றுள்ள ப. சிதம்பரம் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
கல்வான் பள்ளத்தாக்கு, ப. சிதம்பரம்
கல்வான் பள்ளத்தாக்கு, ப. சிதம்பரம்
Published on

லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் கடந்த மாதம் 15-ந்தேதி பயங்கரமாக மோதிக் கொண்டனர். அப்போது இந்தியா ரணுவ வீரர்கள்  20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் பதற்றம் நீடித்தது.

இதனால் இருதரப்புக்கிடையே கமாண்டர், வெளியுறவுத்துறை, ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, இறுதியாக நேற்று முன்தினம் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு சீனா ராணுவம் வாகனம், கூடாரத்துடன் சுமார் 2 கி.மீட்டர் தூரம் வரை பின்வாங்கியது.

அதேபோல் இந்திய ராணுவமும் பின்வாங்கியது. ஆனால் ஆயுதங்களுடன் கூடிய வாகனங்களை சீனா நிறுத்தியுள்ளது. நாங்கள் அதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இந்தியா ராணுவம் தெரிவித்தது.

இந்நிலையில் சீனா ராணுவம் பின்னோக்கி சென்றதை வரவேற்கிறேன் என்று கூறும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

ப. சிதம்பரம் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எல்லையில் சீனப்படைகள் பின்வாங்கி இருப்பதை நான் வரவேற்கிறேன்.

சீன துருப்புக்கள் எந்த இடத்தில் இருந்து பின்வாங்கின, தற்போது அவர்கள் இருக்கும் இடத்தையும் யாராவது நமக்குச் சொல்வார்களா?

இதேபோல் இந்திய துருப்புக்கள் எந்த இடத்தில் இருந்து பின் வாங்கியது?

எந்தவொரு துருப்புக்களும் (சீன அல்லது இந்தியா) LAC-யின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் நகர்ந்ததா?

இந்த கேள்விகளுக்கான பதில்கள் அவசியம், ஏனென்றால் ஜூன் 15-ல் என்ன நடந்தது, என்பதை அறிய இந்திய மக்கள் புதையல் வேட்டையில் உள்ளனர்.’’ என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com