வடசென்னையில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு அரசு வீடு வழங்க நடவடிக்கை - ஓ.பன்னீர்செல்வம்

வடசென்னையில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு அரசு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #Panneerselvam
வடசென்னையில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு அரசு வீடு வழங்க நடவடிக்கை - ஓ.பன்னீர்செல்வம்
Published on

சென்னை:

சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பின் கீழ் பி.கே.சேகர்பாபு (தி.மு.க.) எம்.எல்.ஏ. பேசியதாவது:-

வடசென்னை கல்யாணபுரத்தில் அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. இங்கு வீடு இல்லாத அனைத்து ஏழைகளுக்கும் வீடுகள் கிடைக்கும் வகையில் 3500 குடியிருப்புகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலையோரம் வசிக்கும் ஏழை-எளியவர்கள் அனைவருக்கும் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-

சென்னை யானை கவுனி பாலம் மற்றும் வால்டாக்ஸ் சாலை சந்திக்கும் இடத்தில் உள்ள கல்யாணபுரம் திட்டப்பகுதியில் 260 அடுக்குமாடி குடியிருப்புகள் தரை மற்றும் மூன்றடுக்கு மாடி அமைப்பில் 8 கட்டட தொகுதிகளில் 1976-ம் ஆண்டு கட்டப்பட்டன. இக்குடியிருப்பில் உள்ள வீட்டின் பரப்பு 326 சதுர அடி. திட்டப்பகுதி அமைந்துள்ள சாலையின் அகலம் 18மீ மற்றும் எய்தப்பட்ட தரை பரப்பு குறியீடு எப்.எஸ்.ஐ. அளவு 1.44 ஆகும்.

இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட காரணத்தால் அவை தற்போது வசிக்க ஏற்ற வகையில் இல்லை என்பதை குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் தொழில்நுட்ப குழு பார்வையிட்டு அதனை இடித்துவிட்டு புதியதாக அவ்விடத்தில் குடியிருப்புகள் கட்ட சமீபத்தில் பரிந்துரைத்துள்ளது.

இதன் அடிப்படையில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் இங்கு 360 அடுக்குமாடி குடியிருப்புகள் இரண்டு கட்டட தொகுதிகளாக கட்ட திட்டமிடப்பட்டது. முதல் தொகுதியில் ஒரு தளத்தில் 12 குடியிருப்புகளும், இரண்டாவது தொகுதியில் ஒரு தளத்தில் 6 குடியிருப்புகளும் கட்டப்படும். ஒவ்வொரு கட்டட தொகுதியும் ஸ்டில்ட் மற்றும் 10 மாடிகளுடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் ஒரு வீட்டின் பரப்பு 400 சதுர அடி ஆக இருக்கும். இத்திட்டப்பகுதியில் 10 சதவிகிதம் பூங்கா மற்றும் திறந்தவெளி மேம்பாட்டிற்கும் மற்றும் 7 சதவிகிதம் இடம் இதர பொது வசதிகளான நியாய விலைக்கடை, பாலர் பள்ளிகள் மற்றும் கடைகளுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்ட உத்தேசித்துள்ள 360 குடியிருப்புகளில் அங்கு தற்போது வசித்து வரும் 260 குடும்பங்களை மீண்டும் குடியிருப்பு ஒதுக்கீடு செய்த பின் கூடுதலாக உள்ள 100 குடியிருப்புகளை அப்பகுதியில் குடிசைப்பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் மேம்பாட்டு வளர்ச்சி விதியின்படி இத்திட்டப்பகுதியில் பன்னடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகபட்சம் 60மீ உயரத்துடன் எஸ்.+19 மாடிகள் கட்ட அனுமதிக்கலாம். திட்டத்தின் துவக்க கட்டத்தில் ஒரு குடியிருப்பு ரூ.13.32 லட்சம் செலவில் 396 அடுக்குமாடி குடியிருப்புகள் இரண்டு தொகுதிகளாக எஸ்+15 மாடிகளுடன் 400 சதுர அடி பரப்பளவில் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. பின்னர் ஒரு குடியிருப்பு ரூ.13.47 லட்சம் செலவில் 364 அடுக்குமாடி குடியிருப்புகள் இரண்டு தொகுதிகளாக எஸ்+14 மேம்பாட்டில் கட்ட மாற்றம் செய்யப்பட்டது.

எனினும் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.சேகர்பாபுவின் கோரிக்கையை ஏற்று அதிக மாடி தளங்களை குறைத்து, 14ல் இருந்து தற்போது 10 மாடிகளாக, 360 அடுக்குமாடி குடியிருப்புகள் நான்கு தொகுதிகளாக கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 1 வீட்டின் கட்டுமான தொகை ரூ.13.70 லட்சமாகும்.

இத்திட்டப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பக்கிங்காம் கால்வாய் பகுதியில் வறிய நிலையில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது கட்ட திட்டமிட்டுள்ள 360 அடுக்குமாடி குடியிருப்புகளில் கால்வாய் கரையில் குடிசைகளில் வாழ்ந்து வரும் 100 குடும்பங்களை கூடுதலாக குடியமர்த்த எதுவாக அமையும்.

மேலும், இத்திட்டம் எஸ்+8 மேம்பாட்டில் திருத்தியமைக்கப்பட்டால் 72 குடும்பங்களை குடியமர்த்துவது குறைந்துவிடும். மேலும், 1 வீட்டின் கட்டுமான செலவு ரூ.13.70 லட்சத்தில் இருந்து ரூ.14.30 லட்சமாக உயர்ந்துவிடும். இது மட்டுமின்றி வடசென்னை பகுதியானது மிகவும் மக்கட்தொகை நெருக்கமாக உள்ள பகுதியானதால் இப்பகுதி குடிசைவாழ் மக்களை மறுகுடியமர்வு செய்ய நிலங்கள் கிடைப்பது அரிதாக உள்ளது.

எனவே, குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் வசம் இருக்கும் நிலப்பகுதியில் அதிகப்படியான குடியிருப்புகள் கட்டுவதால் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடிசைப்பகுதி வாழ் மக்களை கூடுமானவரை அதிக எண்ணிக்கையில் மறுகுடியமர்வு செய்யலாம் என தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். #Panneerselvam

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com