

ஓ.பி.எஸ். தரப்பினர் விதித்த முக்கிய நிபந்தனைகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஏற்றுக் கொண்டதையடுத்து அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. சசிகலாவை விலக்கி வைத்து விட்டு ஆட்சி மற்றும் கட்சியை வழி நடத்துவதுவல் அதிகாரப்பகிர்வு செய்வதில் இரு தரப்பினருக்கும் இடையே சற்று இழுபறி ஏற்பட்டது. நேற்று அதில் உடன்பாடு ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக தொடர்வது என்று இரு தரப்பினரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். அதுபோல சசிகலாவை நீக்கிய பிறகு கட்சியை வழி நடத்த 15 பேர் கொண்ட வழிகாட்டும் குழு உருவாக்கவும், அந்த குழுவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை தலைவராக தேர்வு செய்ய இரு தரப்பினரும் சம்மதித்தனர். இவை தவிர மந்திரி சபையை மாற்றம் செய்யவும் தீர்மானித்துள்ளனர்.
இதையடுத்து இன்று அணிகள் இணைப்பிற்காக இரு அணி தலைவர்களும் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்கள். அதன்பின்னர் பிற்பகல் இரு தரப்பினரும் கட்சி தலைமை அலுவலகம் வந்தனர்.