

ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி மேலூர் அரையட்டி பகுதியை சேர்ந்தவர் ஷோபா (30). தற்போது பள்ளி விடுமுறை என்பதால் ஷோபா தனது 2 மகன்கள் மற்றும் உறவினர் மகன் ரிஷி (8) ஆகியோருடன் பைக்காரா புனிதா நகரில் உள்ள தனது மாமா வீட்டுக்கு சென்றார்.
ஷோபா தனது அத்தை புட்நஞ்சம்மாவுடன் தனது இரு மகன்கள் மற்றும் ரிஷியை அழைத்து கொண்டு பைக்காரா ஆற்றை ஒட்டிய பகுதியில் விறகு பொறுக்க சென்றார்.
அப்போது சிறுவன் ரிஷி தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றில் இறங்க முயன்ற போது வழுக்கி விழுந்தான். இதனை அருகில் இருந்த மற்ற 2 சிறுவர்கள் பார்த்து சத்தம் போட்டனர்.
சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த ஷோபா ஆற்றில் இறங்கி ரிஷியை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
கரையில் இருந்த சிறுவர்கள் சத்தம் கேட்டு அப்பகுதியினர் வந்து ஆற்றில் இறங்கி இருவரது உடல்களை மீட்டனர். இது குறித்து பைக்காரா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் மூழ்கி பெண்-சிறுவன் பலியான சம்பவம் பைக்காரா பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.