

சாலைகளில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை நிறுத்தாதவரை வந்தே மாதரம் சொல்ல நமக்கு உரிமை இல்லை என்று கூறியுள்ள பிரதமர் மோடி, கல்லூரி, பல்கலைக்கழக தேர்தல்கள் நேர்மையாக நடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய நிகழ்வின் 125-ம் ஆண்டு நினைவு தினம் மற்றும் தீனதயாள் உபத்யாயாவின் நூற்றாண்டு தினம் ஆகியவற்றையொட்டி டெல்லியில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றும்போது அவர் கூறியதாவது:-
விவேகானந்தரின் சிகாகோ உரை அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாக இருந்ததே தவிர, 2001-ம் ஆண்டு நடந்த சம்பவத்தை (அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்) பற்றியதாக இருக்கவில்லை. இது வெறுப்பு மற்றும் அழிப்பை பற்றியது. சுவாமி விவேகானந்தரின் அந்த உரையை மறக்காமல் இருந்திருந்தால், ஒருவேளை அந்த பயங்கரவாத தாக்குதல் நடக்காமல் இருந்திருக்கலாம்.
எப்போதும் புதிய முயற்சிகளை ஆதரித்த சுவாமி விவேகானந்தரின் எண்ணங்கள் இந்தியாவின் சுய நம்பிக்கையை நோக்கியே இருந்தது. இந்த பலமே உள்நாட்டு தயாரிப்பு மற்றும் தொழில் முனைதல் போன்றவற்றை ஊக்குவிப்பதற்கான ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை உருவாக்க எங்கள் அரசை தூண்டியது.
இந்த விழா அரங்கினுள் நான் நுழைந்த போது ‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’ என மக்கள் எழுப்பிய ஒலியால், எனது இதயம் தேசப்பற்று மதிப்பீடுகளால் நிறைந்தது. ஆனால் வந்தே மாதரம் கூறுவதற்கான உரிமை நமக்கு இருக்கிறதா? சாலைகளில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை நாம் வைத்திருக்கும் வரை, வந்தே மாதரம் கூறுவதற்கான உரிமை நமக்கு இல்லை.
சாலைகளை தூய்மையாக வைத்திருப்போமோ இல்லையோ, நமது தாய் மண்ணில் சிறுநீர் கழிக்க நமக்கு உரிமை இல்லை. ஒரு நாட்டை அதன் 5 ஆயிரம் ஆண்டு பழமையை வைத்து உலகம் மதிப்பீடு செய்வதில்லை. மாறாக அந்த நாட்டில் எங்கே? என்ன இருக்கிறது? என்பதை வைத்தே மதிப்பிடப்படுகிறது.
எனவே இந்தியாவை தூய்மையாக வைக்க அயராது உழைக்கும் மக்களை நான் நன்றியுடன் நினைவுகூருகிறேன். நமது கல்வி வளாகங்கள் அனைத்து அம்சங்களிலும் தூய்மையாக இருக்க வேண்டும். இனிமேல் கல்லூரி, பல்கலைக்கழக தேர்தல்கள் நேர்மையாக நடப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.