

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராஜகோபாலன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையன்நாயுடு. இவரது மகன் வெள்ளைச்சாமி (வயது 23). இவர் தொழிற்கல்வி படித்து முடித்து விட்டு, தற்போது வீட்டில் இருந்து வந்தார். அவர், அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அந்த பெண் மற்றொரு நபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வெள்ளைச்சாமி நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெள்ளைச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.