போராட்டம் தொடரும்: நர்சுகளில் ஒரு பிரிவினர் அறிவிப்பு

அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டாலும், டி.எம்.எஸ். வளாகத்தில் நர்சுகளில் ஒரு தரப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் தொடரும்: நர்சுகளில் ஒரு பிரிவினர் அறிவிப்பு
Published on

சென்னை:

அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டாலும், டி.எம்.எஸ். வளாகத்தில் நர்சுகளில் ஒரு தரப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 9,990 நர்சுகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.7,700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வும் ஆண்டுக்கு ரூ.500 வீதம் வழங்கப்படுகிறது. மருத்துவ தேர்வு வாரியம் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் நியமிக்கப்பட்ட இவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி போராடி வருகிறார்கள்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் 2,000 நர்சுகள் அமர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து போராட்டத்தில் இறங்கினர். இந்த நர்சுகளுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

அதில், நர்சுகள் பணிக்கு வராததால் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நர்சுகளை ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது? என கேட்கப்பட்டது.

இதற்கிடையே, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 90 சதவீத கோரிக்கைகள் ஏற்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததால், நர்சுகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில், டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நர்சுகளில் ஒரு தரப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நர்சுகள் கூறுகையில், அரசாணை எண் 191-ஐ நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். அரசு பேச்சுவார்த்தையை ஒரு அறையில் நடத்தக் கூடாது. பொது வெளியில் தான் நடத்தவேண்டும். எனவே போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, டி எம் எஸ் வளாகத்தில் நர்சுகளில் ஒரு தரப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com