ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - 75 லட்சம் மக்கள் தவிப்பு

ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளனர். சுமார் 75 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹகிப்ஸ் புயல்
ஹகிப்ஸ் புயல்
Published on

டோக்கியோ:

ஜப்பான் நாட்டை இன்று தாக்கிய ஹகிபிஸ் புயல்  தலைநகரான டோக்கியோவின் தென்மேற்கில் உள்ள பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் ஹோன்ஷு தீவை தாக்கிய இந்த புயல் டோக்கியோ நகரின் தென்மேற்கில் உள்ள இஸு தீபகற்பம் பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த புயலின் எதிரொலியாக இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. 

இந்த புயல் தொடர்பான எச்சரிக்கையாக  சுமார் 75 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் சுமார் 50 ஆயிரம் மக்கள் மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளர். சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com