பிரதமரின் நேர்மை குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது - ராஜ்நாத் சிங் சொல்கிறார்

பிரதமர் மோடியின் நேர்மை குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். #RajnathSingh #Modi
பிரதமரின் நேர்மை குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது - ராஜ்நாத் சிங் சொல்கிறார்
Published on

பாட்னா:

இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடியில் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது, அதற்கு இணையாக பிரதமர் அலுவலகமும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு ராணுவ அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஆங்கில நாளேடு ஒன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது. இது மீண்டும் இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி உள்ளது.

இதை கூடுதல் ஆதாரமாக எடுத்துக்கொண்டுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். அதுவும் ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி குற்றவாளி என நேரடியாகவே ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பா.ஜனதாவினர் மறுத்துள்ள நிலையில், உள்துறை மந்திரியும், மூத்த பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான ராஜ்நாத் சிங்கும் நேற்று மறுத்து உள்ளார். கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

எனது அரசியல் வாழ்க்கையில் யார் மீதும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை நான் ஒருபோதும் கூறியதில்லை. தூய்மையான அரசியலை தொடரும் நான், வார்த்தைகளை உபயோகிப்பதிலும், கண்ணியத்தை காப்பதிலும் எப்போதும் கவனமாக இருப்பேன்.

கடந்த பல ஆண்டுகளாக பிரதமர் மோடியை எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். மோடிக்கு எதிராக நீங்கள் வேறு குற்றச்சாட்டுகளை, அதாவது ‘அவர் குறைவாக உழைக்கிறார் அல்லது அதிகம் உழைக்கிறார்’ என்றோ, அவர் அதிகம் உழைத்திருக்க வேண்டும் என்றோ கூற முடியும். ஆனால் அவரது நோக்கம் மற்றும் நேர்மை குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது.

மோடியின் நேர்மை மீது யாருக்கும் சந்தேகம் இல்லை. ஏனெனில் அவர் யாருக்காக சொத்துகளை குவிக்க வேண்டும்? எனவே மக்களை தவறாக வழிநடத்தி ஒருவர் அரசியல் செய்யக்கூடாது. அவர்களின் கண்ணில் மண்ணை தூவக்கூடாது.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com