

திருவனந்தபுரம்:
கேரளாவை சேர்ந்தவர் பாதிரியார் தாமஸ் உழுநாளில். இவர் ஏமன் நாட்டில் செயல்படும் அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த ஆசிரமத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் பாதிரியார் தாமஸ் உழுநாளிலை கடத்திச் சென்றனர். அவரது புகைப்படங்களை தீவிரவாதிகள் வெளியிட்ட பிறகே அவர் உயிருடன் இருப்பது தெரிந்தது. இதையடுத்து பாதிரியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, மத்திய அரசு எடுத்த தொடர் நடவடிக்கைக்கு பிறகு கடந்த 11-ம் தேதி தீவிரவாதிகள் அவரை விடுவித்தனர். அதைதொடர்ந்து, வாடிகன் நகருக்கு சென்ற பாதிரியார், அங்கு போப் ஆண்டவரை சந்தித்து பேசினார். மேலும், டெல்லிக்கு சென்று, பிரதமர் மோடி, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ், இணை மந்திரி வி.கே.சிங் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், பாதிரியார் தாமஸ் உழுநாளில் இன்று காலை கேரள மாநிலம் கொச்சியை வந்தடைந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், எனது விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சொந்த வீட்டுக்கு செல்வது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.