மும்பை தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் நிறைவு - உயிர்நீத்த போலீசார் நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை

மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் நிறைவை தொடர்ந்து, உயிர்நீத்த போலீசார் நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களும் புகழஞ்சலி செலுத்தினர். #MumbaiAttack
மும்பை தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் நிறைவு - உயிர்நீத்த போலீசார் நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை
Published on

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி லஸ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கடல் மார்க்கமாக ஊடுருவினர். சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட், தாஜ் ஓட்டல், காமா மருத்துவமனை, நரிமன்ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் அப்பாவி மக்கள், வெளிநாட்டினர், போலீசார் என 166 பேர் கொல்லப்பட்டனர். 308 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கொடூர தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அதன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த போலீசாரின் நினைவிடம் மெரின்டிரைவ் போலீஸ் ஜிம்கானாவில் உள்ளது. அங்கு மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

போலீஸ் உயர் அதிகாரிகளும், உயிர்நீத்த போலீசாரின் குடும்பத்தினரும், ஏராளமான மக்களும் திரண்டு வந்து மரியாதை செலுத்தினர். பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை கிர்காவ் கடற்கரையில் வைத்து பிடித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துக்காராம் ஒம்பாலேவும் கொல்லப்பட்டார். கிர்காவ் கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திலும் ஏராளமானவர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேபோல பயங்கரவாத தாக்குதல் நடந்த காமா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் உள்ள உயிரிழந்தவர்கள் நினைவிடத்திலும் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com