திருவொற்றியூரில் முதியவர் அடித்து கொலை- தொழிலாளி கைது

திருவொற்றியூரில் மீன்கடை வைக்கும் தகராறில் முதியவர் அடித்து கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
திருவொற்றியூரில் முதியவர் அடித்து கொலை- தொழிலாளி கைது
Published on

திருவொற்றியூர்:

புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ. கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 61). இவருக்கு சொந்தமான இடம் திருவொற்றியூர் கார்கில் நகரில் உள்ளது. அதில் வீடுகள், கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு இருந்தார்.

அந்த இடத்தின் அருகே அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ராஜனின் மனைவி ராணி மீன் வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாண்டியனின் இடத்தின் அருகே புதிதாக மீன்கடை அமைக்க கொட்டகை அமைத்தார்.

இதுபற்றி அறிந்த பாண்டியன் நேற்று மாலை அங்கு வந்தார். அவர் மீன்கடை கொட்டகையை பிரித்து எரிந்ததாக தெரிகிறது. இதனை ராஜன் கண்டித்தார்.

இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ராஜன் அருகில் கிடந்த கட்டையால் பாண்டியனை தாக்கினார்.

பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாரிமுனையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குபதிவு செய்து ராஜனை கைது செய்தனர். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com