

மங்களமேடு:
மங்களமேட்டை அடுத்துள்ள ஒகளூர் கிராமத்தில் திருட்டுத்தனமாக அரசு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக பெரம்பலூர் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவின் பேரில் கிட்டங்கி மேலாளர் பிரகாசம் தலைமையில், வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் சக்திவேல், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் சந்திரமோகன், அருண் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் மாலை ஒகளூரில் ஆய்வு செய்தனர்.
அப்போது வடிவேல் மகன் ராஜா என்பவரது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ராஜாவை விசாரித்த போது அவர், சக்திவேல்(வயது 52) என்பவருக்கு வீட்டை வாடகைக்கு விட்டு இருப்பதாக கூறினார். பின்னர் வீட்டை திறந்து பார்த்தபோது அங்க ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வகையான 1,556 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. அதை தொடர்ந்து அனைத்தும் மூட்டையில் கட்டப்பட்டு மங்களமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா திருட்டுத்தனமாக மது விற்பனை செய்த சக்திவேல் மற்றும் விற்பனைக்கு உதவிய கோவிந்தசாமி(46) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.