அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை

விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரி தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில் மாநில அரசு எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து சொத்துக்களை முடக்குவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.
அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை
Published on

புதுக்கோட்டை:

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரையடுத்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்களில் கடந்த ஏப்ரல் 7-ந்தேதி வருமான வரித்துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

சென்னையில் உள்ள வீடு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீடு, திருவேங்கைவாசலில் அவரது குடும்பத்தினரின் பெயரில் உள்ள கல்குவாரி, மேட்டுச்சாலையில் உள்ள கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடிக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் ஏப்ரல் 11-ந்தேதி திருவேங்கைவாசலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை மத்திய பொதுப்பணித்துறை அலுவலர்கள் மதிப்பீடு செய்தனர். அதன்பிறகு வருமான வரித்துறை துணை இயக்குனர் கார்த்திக் மாணிக்கம் தலைமையில் வருமான வரித்துறை அலுவலர்கள் 10 பேர், இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீட்டிற்கு மே 17-ந் தேதி சென்றனர்.

அங்கு ஏற்கனவே ஆய்வு மேற்கொண்ட போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அந்த வீட்டின் ஒரு அறையில் வைத்து சீல் வைத்து விட்டு சென்றனர்.

இந்த சோதனையை அடுத்து விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி, அண்ணன் உதயகுமார் இருவரும் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். தொடர்ந்து சம்மன் மூலம் அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தந்தை சின்னதம்பி உள்ளிட்டோரின் பெயரில் உள்ள சொத்துக்களை முடக்கி வைக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட பதிவாளருக்கு வருமான வரித்துறை அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் வருமான வரித்துறை சோதனையில் உட்படுத்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட பதிவாளர் அலுவலகத்தினர் கூறும்போது, வருமான வரித்துறை அலுவலர்களின் விசாரணையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், குவாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்களை முடக்கி வைக்க வேண்டும் என்று ஜூலை 28-ந்தேதி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு நோட்டீஸ் வந்தது.

அந்த நோட்டீஸ் குறித்து மாவட்ட பதிவாளர் சசிகலா, வருவாய்துறை உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். மேலும் கடந்த சில நாட்களாகவே வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்தும் தொலைபேசி மூலம் தகவல் பரிமாறி கொள்ளப்பட்டது என்றனர்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பிய போதிலும், புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மாநில அரசு எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து சொத்துக்களை முடக்குவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.

அமைச்சர் தரப்பினரின் சொத்துக்களை யாரிடமும் மாற்றம் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதா? அல்லது குவாரிகளை இயக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளக்கூடாதா? என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. இது தொடர்பாக மாவட்ட பதிவாளர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் உள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தி வருகிறார். மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதால், அதை திசை திருப்புவதற்காக மத்திய அரசு இத்தகைய செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com