

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது மாவட்டத்தின் முதன்மையான நீர் ஆதாரமாக விளங்குவதோடு சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 மாதங்களாக நீர் வரத்து இல்லாமல் வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. பின்னர் கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணைக்கு திறக்கப்பட்டது. அங்கிருந்து வடவாறு வழியாக கடந்த 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 2,200 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. இன்றும் அதே கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
ஏரியின் நீர்மட்டம் நேற்று 42.45 அடியாக இருந்தது. இன்று அது 43.35 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீராணம் ஏரியின் கடைசி பகுதியான சேத்தியாத் தோப்பு அருகே பூதங்குடியில் நீரேற்று நிலையம் உள்ளது. இங்கு காவிரி தண்ணீர் வந்தது. இங்கிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.