எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளில் மகளிருக்கு 33 சதவீதம் - ஒடிசா சட்டசபையில் மசோதா நிறைவேறியது

ஒடிசா மாநிலத்தில் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது. #OdishaAssembly #33pcreservation #womenreservation
எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளில் மகளிருக்கு 33 சதவீதம்  - ஒடிசா சட்டசபையில் மசோதா நிறைவேறியது
Published on

புவனேஸ்வர்:

பாராளுமன்ற தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிட பெண்களுக்கு உரிய வகையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை என பெண்ணுரிமை ஆர்வலர்கள் நாடு முழுவதும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

147 உறுப்பினர்களை கொண்ட ஒடிசா மாநில சட்டசபையில் தற்போது 12 பெண் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். ஆண்-பெண்களுக்கு இடையிலான இந்த விகிதாச்சாரத்தை ஓரளவுக்கு சீரமைக்க முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தீர்மானித்தார்.

இதைதொடர்ந்து,  எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் மசோதா ஒன்றை அவர் சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா எதிர்ப்பு ஏதுமின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

எனினும், நேற்றிரவு இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சட்டசபை பா.ஜ.க. தலைவர் கே.வி.சிங்டியோ, பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும்கட்சியால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதாவில் ஏதோ உள்நோக்கம் உள்ளதாக குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி கொறடாவும் இதே கருத்தை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த அரசு கொறடா, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் விஷயத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒடிசா முன்மாதிரியாக இருந்து வந்துள்ளது என தெரிவித்தார். #OdishaAssembly #33pcreservation #womenreservation 

X

Maalai Malar
www.maalaimalar.com