

முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அ.தி.மு.க. அணிகள் இணைவது தொடர்பாக எங்களது (புரட்சித்தளைவி அம்மா அணி) நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்து விட்டோம். ஆனால் எடப்பாடி அணியில் இருப்பவர்கள் அவர்களாகவே கேள்வியை கேட்டு பதிலை சொல்கிறார்கள். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய வளர்த்த அ.தி.மு.க. மக்கள் இயக்கமாக உள்ளது. மக்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. இதனால் அ.தி.மு.க. எங்கள் பக்கமே இருக்கிறது.
டி.டிவி. தினகரன் 5-ந் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு செல்வது பற்றி கேட்கிறீர்கள். நாங்கள் நிலையை கூர்ந்து கவனித்து வருகிறோம். அவர் அங்கு சென்றால் என்ன நடக்கும் என்பதை பொறுத்து எங்களது கருத்துக்களை தெரிவிப்போம்.
பெங்களூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்த விடுதியில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியது போல் கூவத்தூரிலும் சோதனை நடத்தியிருக்க வேண்டும் என்பதே எங்களது எண்ணம்.
ஜெயலலிதா ஆட்சியின் போதும், எங்களது ஆட்சியின் போதும் நீட் தேர்வுக்கு ஏற்ப தமிழகத்தில் பாட திட்டங்களை மாற்றிய பிறகே நீட் தேர்வை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இப்போதைய நீட் தேர்வில் கலந்து கொண்டவர்கள் தேர்ச்சி பெற்றாலும், கலந்தாய்வில் தேர்ச்சி பெறுவது குதிரை கொம்பாக உள்ளது. நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
இப்போது நடக்கும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தினகரன் குடும்பத்தினரால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி ஆகும். ஆனால் அவர்கள் தினகரனை ஒதுக்கி வைக்கப்பட்டதாக கூறுவது ஆழமான மனநிலையில் சிந்தித்து கூறுகிறார்களா? அல்லது நாடகம் ஆடுகிறார்களா? என்று மக்களுக்கு தெரியவில்லை.
இதை பொறுப்பில் இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி, மக்களுக்கு முழுமையாக தெளிவுப்படுத்த வேண்டும். அவர்கள் பக்கம் 122 எம்.எல்.ஏ.க்கள், 2417 நிர்வாகிகள் உள்ளனர். எங்கள் பக்கம் மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் உள்ளனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்து முடக்கப்பட்டதும், அதிகாரிகள் மாற்றப்பட்டது குறித்தும் கேட்கிறீர்கள். இந்த ஆட்சியே ஊழல் மிகுந்த ஆட்சியாக தான் உள்ளது. இது எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் செய்யும் துரோகம் ஆகும்.