

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இன்று 'உயிரில் கலந்த உறவுகள்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.
அதன் பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
மறைந்த தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்ற நாங்கள் தர்ம யுத்தத்தை தொடங்கியுள்ளோம். இந்த தர்ம யுத்தம் ஜெயலலிதாவின் ஆசியுடன் வெற்றிகரமாக முடியும் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.
தற்போது தமிழக அரசியலில் குழப்பமான நிலை நிலவி வருகிறது. இதன் முழு விபரங்கள் தெரிந்தால் மட்டுமே நான் கருத்து கூற முடியும். நான் ஏற்கனவே கூறியது போல சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் கட்சியில் இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
எங்கள் கோரிக்கை ஏற்கனவே அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. இரு அணிகளும் இணைவதில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை.