ஒட்டன்சத்திரம் பகுதிகளில் சத்துணவு முட்டை வழங்குவதில் குளறுபடி

ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளில் முட்டை சரிவர வழங்காததையடுத்து, தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முட்டை
முட்டை
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா 35 ஊராட்சிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு சத்துணவு திட்டத்தின்கீழ் முட்டை வழங்கப்படுகிறது. பள்ளிகளுக்கு ஐந்து நாட்களும், அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு மூன்று நாட்களும் வழங்கப்படுகிறது.

பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு முட்டை வழங்கும் ஒப்பந்ததாரர் மாதத்தில் இரண்டு மற்றும் மூன்று நாட்கள் முட்டைகள் வழங்கப்படுவதில்லை என்றும், ஆனால் முட்டை வழங்கியதாக கணக்குகள் காட்டுவதாகவும் மேலும் அதிக அளவில் அழுகிய முட்டைகள் வருவதாகவும் அதிகாரிகளிடம் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடியில் பணிபுரியும் ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதனடிப்படையில் கடந்த வாரம் திடீரென்று ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் உள்ள பதினைந்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது பள்ளிகளுக்கு முட்டை வழங்காதது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 10, 11-ந் தேதிகளில் முட்டைகள் வழங்கப்படவில்லை என்று கண்டறியப்பட்டு, இந்நிலையில் நாமக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு முட்டை வழங்குவதற்கு ஒப்பந்தம் எடுத்துள்ளது. இவர்கள் முறையாக முட்டை வழங்குவதில்லை மற்றும் அழுகிய முட்டைகள் அதிகமாக வருவதாகவும் இதன் காரணமாக அவர்களின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் ஒட்டன்சத்திரம் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com