திண்டுக்கல் மாவட்டத்தில் 46 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

திண்டுக்கல் மாவட்டத்தில் உரிமங்களை புதுப்பிக்காத 46 தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 46 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்
Published on

திண்டுக்கல்:

தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தலின்படி உரிமங்களை புதுப்பிக்க வேண்டும். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 68 பள்ளிகள் உரிமங்களை புதுப்பிக்காமல் இருந்து வந்தனர்.

அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இறுதி தேர்வு தொடங்குவதற்குள் ஆவணங்களை சமர்பித்து ரத்து நடவடிக்கையில் இருந்து தப்பிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து 8 பள்ளிகள் உரிமங்களை புதுப்பித்துக் கொண்டன.

மேலும் 6 தொடக்கப்பள்ளிகள் உள்பட 52 உயர்நிலை பள்ளிகள் இன்னும் புதுப்பிக்கவில்லை. அந்த பள்ளி நிர்வாகிகளை அழைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்கள் பள்ளியின் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்ற விபரம் தெரியாமல் உள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் அந்த பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் கிடைக்காது. எனவே மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு தேர்வு வருவதற்குள் உரிமங்களை புதுப்பிக்க வேண்டும். 10 நாட்களுக்குள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டது.

இதே போல் அங்கீகாரம் பெறாத திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகள் உடனடியாக அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இல்லையெனில் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். வரும் கல்வியாண்டில் அந்த பள்ளிகளை மூடுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com