

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வெப்ப சலனம் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலில் நீடிக்கும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று பல இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும், கன்னியாகுமரி, காரைக்கால், நாகப்பட்டினம், விழுப்புரம், பாம்பன், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் கோபியில் அதிகபட்சமாக 80 மி.மீ. மழை பெய்துள்ளது. சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரத்தில் 60 மி.மீ. மழையும், உடுமலைப்பேட்டை, தாளவாடியில் 50 மி.மீ. மழையும், தாராபுரம், பொள்ளாச்சி, காங்கேயத்தில் 40 மி.மீ. மழையும், கொடைக்கானல், தென்காசி, அரவக்குறிச்சி, பேச்சிப்பாறை, ஊட்டியில் 30 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை முடிவடைந்ததும் அக்டோபர் 2-வது வாரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர். #SouthWestMonsoon #NortheastMonsoon