வடகொரிய பெண்கள் குட்டையாக முடி வைக்க தடை

வடகொரியாவில் பெண்கள் தங்களது தலைமுடியை நீளமாக வளர்க்க வேண்டும். தலை முடியை வெட்டி அழகாக குட்டையாக வைக்க கூடாது. இறுக்கமான பேண்ட் மற்றும் குட்டை பாவாடை அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published on

சியோல்:

அதிபர் கிம் ஜாங்-யங் தலைமையில் கட்டுப்பாடு மிக்க கம்யூனிச ஆட்சி நடைபெறும் வடகொரியாவில் இருந்து தப்பி பலர் தென் கொரியாவில் அகதிகளாக தஞ்சம் அடைகின்றனர்.

அவ்வாறு தஞ்சம் அடைந்த கிம் ஜங்-ஹையுக் என்ற 20 வயது வாலிபர் வடகொரியாவில் வாழும் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் குறித்து பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, ‘‘வடகொரிய பெண்கள் தங்களது தலைமுடியை நீளமாக வளர்க்க வேண்டும்.

தலை முடியை வெட்டி அழகாக குட்டையாக வைக்க கூடாது. இறுக்கமான பேண்ட் மற்றும் குட்டை பாவாடை (‘மினி ஸ்கர்ட்’) அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

வாலிபர் கிம் கடந்த 2012-ம் ஆண்டு வடகொரியாவில் இருந்து தப்பி தென்கொரியா வந்தார். இங்கு தஞ்சம் அடைந்த அவர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் பாடம் படிக்கிறார்.

தப்பி வந்து அகதியாக தஞ்சம் அடைந்த சோ இபுன்-ஏ என்ற 35 வயது பெண் கூறும்போது, ‘‘வடகொரியாவில் வாழ்ந்த எனது நாட்கள் மிகவும் கடுமையானவை. நான் வளர்ந்து வரும்போது பல கொடுமைகளை அனுபவித்தேன். அங்கு புதுமண தம்பதிகள் தேனிலவு கொண்டாட முடியாது.

சினிமா தியேட்டர் மற்றும் கேளிக்கை விடுதி கிடையாது. எனவே, வீட்டை பூட்டிக் கொண்டு தென்கொரியாவில் இருந்து கடத்திவரப்பட்ட சினிமா பட சி.டி.க்களை பார்த்து மகிழ்வோம். இருந்தும் ரோந்து வரும் அதிகாரிகளிடம் சிக்கினால் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு கடும் தண்டனை விதிக்கப்படும்’’ என்றார்.

இவர் வடகொரியாவில் இருந்து 2009-ம் ஆண்டு தப்பித்து சீனா சென்றார். 3 ஆண்டுகளுக்கு பிறகு தென் கொரியா வந்து அகதியாக தஞ்சம் அடைந்தார். இவர் தப்பியதால் அவரது தாயாரை வடகொரிய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com