எல்லை தாண்டிச் சென்ற வடகொரிய வீரர் மீது சக வீரர்கள் துப்பாக்கிச்சூடு

வடகொரியாவில் இருந்து ராணுவ வீரர் ஒருவர் தென்கொரியாவுக்குள் எல்லையோர கிராமம் வழியாக தப்பிச்செல்ல முயன்ற போது சக வீரர்கள் அவர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
எல்லை தாண்டிச் சென்ற வடகொரிய வீரர் மீது சக வீரர்கள் துப்பாக்கிச்சூடு
Published on

சியோல்:

கொரிய தீபகற்பத்தில் 1953-ம் ஆண்டு நடந்த போருக்கு பின்னர், வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது.

இந்த நிலையில் வட கொரியாவில் இருந்து தென் கொரியாவுக்கு மக்கள் தொடர்ந்து தப்பிச் செல்கின்றனர். பெரும்பாலனோர் சீனா வழியாக தப்பிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் வடகொரியாவில் இருந்து ராணுவ வீரர் ஒருவர் தென்கொரியாவுக்குள் எல்லையோர கிராமம் வழியாக தப்பிச்செல்ல முயன்றார்.

ராணுவம் குவிக்கப்பட்டிருந்த பகுதி வழியாக அவர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி ஓட முற்பட்டபோது, வடகொரிய வீரர்கள் அவர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அவர் மீது 6 முறை சுடப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவம், எல்லை பகுதியில் அமைந்துள்ள பேம்முன்ஜம் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. படுகாயம் அடைந்த அந்த வீரர் அங்கிருந்து உடனடியாக மீட்கப்பட்டு வான்வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவருக்கு சிகிச்சை அளித்து வருகிற டாக்டர் லீ குக் ஜாங், சியோலில் நிருபர்களிடம் கூறும்போது, “6 முறை அவர் சுடப்பட்டுள்ளார். அவரது அடிவயிற்றில் ஏற்பட்டுள்ள காயம் மிக மோசமானது. அவரது உடல் உள்ளுறுப்புகள் மிகவும் சேதம் அடைந்துள்ளன. அவர் எவ்வளவு காலம் தாக்குப்பிடிப்பார் என்பது தெரியவில்லை. அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் ஒரு அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com