வடகொரியாவில் மீன்களுக்கு இரையாக்கப்பட்ட ராணுவ தளபதி

வடகொரியாவில் ராணுவ புரட்சி நடத்த முயன்ற ராணுவ தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் பிரானா மீன்களுக்கு இரையாக்கப்பட்டார்.
வடகொரியாவில்  மீன்களுக்கு இரையாக்கப்பட்ட ராணுவ தளபதி
Published on

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இவர், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக அவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதிலும், மீண்டும் வேறு யாரும் தனக்கு எதிராக செயல்படக்கூடாது என எச்சரிக்கும் விதமாக கொடூரமான முறையில் மரண தண்டனையை வழங்கி வருகிறார். தந்தையின் மறைவுக்கு பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கிம் ஜாங் அன், இதுவரை அரசில் உயர் பதவி வகிக்கும் 16 பேருக்கு மரண தண்டனை அளித்து இருக்கிறார்.

தனது உரையின் போது சத்தமாக கைதட்டவில்லை என்பதற்காக தனது சொந்த மாமாவையே பீரங்கிகளை தகர்க்க பயன்படுத்தும் துப்பாக்கி குண்டு மூலம் சுட்டு கொலை செய்துள்ளார். வடகொரியா ராணுவ தலைவர், மத்திய வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி, கியூபா மற்றும் மலேசியாவுக்கான தூதர்கள் உள்ளிட்டோருக்கும் கிம் ஜாங் அன், மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ராணுவ புரட்சி நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில், வடகொரிய ராணுவ தளபதி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்கிற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த ராணுவ தளபதியின் பெயர் வெளியிடப்படவில்லை. பியாங்யாங்கில் உள்ள தனது வீட்டில் கிம் ஜாங் அன் வைத்திருக்கும் பிரமாண்டமான பிரானா மீன் தொட்டியில் அந்த ராணுவ தளபதி தூக்கி வீசப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ராணுவ தளபதியின் கைகள் மற்றும் உடல் பகுதிகள் வெட்டப்பட்ட நிலையில், ரத்தம் சொட்ட சொட்ட அவரை பிரானா மீன்களுக்கு இரையாக்கி உள்ளார் கிம் ஜாங் அன். தொட்டியில் இருந்த நூற்றுக்கணக்கான பிரானா மீன்கள், அவரது உடலை கடித்து குதறி சாப்பிட்டுள்ளன.

பிரானா மீன்கள் மிகவும் மூர்க்கமானவை. அவை இரும்பு போன்ற பற்களை கொண்டிருக்கும். அதன் மூலம் இரும்பு தகடுகளையே கடித்து தூள்தூளாக்கி விடும். மாமிச விரும்பிகளான பிரானா மீன்கள் தனது வலுவான பற்களை கொண்டு சில வினாடிகளிலேயே மனித உடலை அடையாளம் தெரியாமல் சிதைத்துவிடும்.

இந்த மரண தண்டனை குறித்த தகவலை தெரியப்படுத்தி உள்ள இங்கிலாந்து உளவுப்படையினர், ‘ஜேம்ஸ்பாண்டு’ படத்தின் பாணியில் கிம் ஜாங் இந்த மரணதண்டனையை நிறைவேற்றியதாக தெரிவித்துள்ளனர். கடந்த 1965-ம் ஆண்டில் வெளியான ‘யு ஒன்லி லிவ் டுவைஸ்’ என்ற ஜேம்ஸ்பாண்டு படத்தில் வில்லன் தனது உதவியாளரை பிரானா மீன்களுக்கு இரையாக்கி கொடூரமாக கொலை செய்யும் காட்சிகள் உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com