

சியோல்:
தென்கொரியா நாட்டின் பியங்சாங் நகரில் வரும் 9-2-2018 முதல் 25-2-2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. தென்கொரியாவின் தீவிர பகை நாடான வடகொரியா இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்குமா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கிய நிலையில் புத்தாண்டு அன்று தொலைக்காட்சியில் உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வடகொரியா தனது அணியை அனுப்பும் என தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, விரிவான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரண்டாடுகளாக துண்டிக்கப்பட்டிருந்த தென்கொரியா நாட்டுடனான ‘ஹாட்லைன்’ தொலைபேசி வசதியை இருநாடுகளின் எல்லைப்பகுதியில் வடகொரியா சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.
பியங்சாங் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் கலந்துகொள்ள 140 பேர் கொண்ட கலைக்குழுவை அனுப்பிவைக்க கடந்த 15-ம் தேதி வடகொரியா சம்மதம் தெரிவித்தது.
இந்நிலையில், டேக்வான்டோ தற்காப்புக்கலை வீரர்கள் 30 பேரை கொண்ட குழு, மாற்றுத்திறனாளிகள் போட்டிகளுக்கான 150 வீரர்-வீராங்கனைகள் மற்றும் 230 ‘சீர்லீடர்ஸ்’ அடங்கிய குழு என மொத்தம் 550 பேர் கொண்ட குழுவை தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுப்பிவைக்க வடகொரியா இன்று சம்மதம் தெரிவித்துள்ளது. #NorthKorea #SouthKorea #WinterOlympics #tamilnews