

உடுமலை:
உடுமலை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் பிரசவத்திற்கு அதிகளவு தாய்மார்கள் வருகின்றனர். உடுமலை சிவசக்தி காலனியைச்சேர்ந்தவர் ஜெகதீஷ்பாபு. இவரது மனைவி நிர்மலாதேவி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு குழந்தை எடை அதிகமாக இருப்பதாகவும், சிசேரியன் மூலமே குழந்தை பிறக்கும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்தநிலையில் நிர்மலாதேவி பிரசவத்திற்காக உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர் ஜோதிமணி தலைமையிலான மருத்துவ குழுவினர் நிர்மலாதேவிக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது சுகப்பிரசவம் மூலம் 4.5 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். இதுகுறித்து மருத்துவ குழுவினர் கூறுகையில், அதிக எடையுடன் குழந்தை இருந்ததால் சிசேரியன் மூலம் மட்டுமே பிறக்கும் என்ற நிலையில் டாக்டர் மற்றும் குழுவினரின் முயற்சியால் நிர்மலாதேவிக்கு சுகப்பிரசவம் வாயிலாக குழந்தை பிறந்துள்ளது என்றனர்.