சபரிமலை பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்த குளறுபடியும் இல்லை: போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. தகவல்

“சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்த குளறுபடியும் இல்லை” என்று போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யும், சபரிமலை பாதுகாப்பு பணி ஒருங்கிணைப்பாளருமான சுதேஷ்குமார் கூறினார்.
சபரிமலை பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்த குளறுபடியும் இல்லை: போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. தகவல்
Published on

சபரிமலை:

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜையையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அதே நேரத்தில் சபரிமலைக்கு தீவிரவாத மிரட்டல்கள் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பதிவிடப்படுகின்றன. இதுகுறித்து சபரிமலை கோவில் பாதுகாப்பு பணிகள் ஒருங்கிணைப்பாளரும், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யுமான சுதேஷ்குமார் சபரிமலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சபரிமலைக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக வெளியாகி வரும் தகவல்கள் வெறும் புரளிதான். சமூக வலைத்தளங்களில் இது போன்று விஷமத்தனமாக பொய்யான தகவல்கள் அடிக்கடி வெளியாகின்றன. அதை நம்ப தேவை இல்லை.

பக்தர்களின் வருகை அதிகரித்து இருப்பதால் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம். விமான படை உதவியுடன் நிலக்கல், பம்பை மற்றும் சபரிமலை சன்னிதான பகுதிகள், அதன் அருகே உள்ள வனப்பகுதிகள் கண்காணிக்கப்படும். அதற்கு நவீன கேமராக்கள் பயன்படுத்தப்படும்.

தீவிரவாத அச்சுறுத்தல் என்று தவறான தகவல்களை வெளியிட்டு வரும் நபர்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். பொய்யான தகவல்களை பரப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சபரிமலை பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்த குளறுபடியும் இல்லை. கேரள போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் பணியாற்றி வருகின்றனர்.

குடிநீர் தேவைக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்படும் குன்னார் அணைப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதே போல் பைப் லைன் மூலமாக தண்ணீர் கொண்டுவரும் பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com