நிர்பயா வழக்கிலும் குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும்- தாயார் வேண்டுகோள்

நிர்பயா வழக்கிலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும் என அவரது தாயார் கூறியுள்ளார்.
நிர்பயாவின் தாயார்
நிர்பயாவின் தாயார்
Published on

புதுடெல்லி:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த மாதம் 27-ம் தேதி இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், பெண் டாக்டர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் இன்று அதிகாலை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். காவல்துறையின் இந்த நடவடிக்கையை பலரும் வரவேற்றுள்ளனர். 

டெல்லியில் கற்பழித்து கொடூரமாக கொல்லப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவியும், தெலுங்கானா போலீசாரின் இந்த என்கவுண்டரை வரவேற்றுள்ளார். அவர் கூறியதாவது:-

குற்றவாளிகளுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. போலீசார் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இதேபோல் நிர்பயா வழக்கிலும் குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்பட வேண்டும் என நாட்டின் நீதித்துறையையும் அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com