

புதுடெல்லி:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.12,717 கோடி மோசடி செய்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அமலாக்கத்துறை ஆகியவை விசாரித்து வருகிறது.
இந்த மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடி மற்றும் அவரது மனைவி அமீ மோடி, சகோதரர் நிஷால், உறவினர் மெகுல் சோக்ஷி ஆகிய 4 பேர் வெளிநாடு தப்பிவிட்டனர். அவர்களை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவி மூலம் சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள், நிரவ் மோடி நிறுவனத்தினர் பலர் கைதாகி உள்ளனர்.
நிரவ் மோடியின் அனைத்து சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. வெளிநாட்டு சொத்துக்களையும் முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. சொகுசு கார்கள், இறக்குமதி செய்யப்பட்ட கடிகாரம் என பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நிரவ் மோடி உறவினர் மெகுல் சோக்ஷியின் சொத்துக்களையும் முடக்கி அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அவரது 41 சொத்துக்களை அமலாக்கத்துறையினர் நேற்று முடக்கினர். இதன் மதிப்பு ரூ.1,217 கோடியாகும்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பஞ்சாப் நேசனல் வங்கியை சேர்ந்த மேலும் ஒரு அதிகாரியை சி.பி.ஐ. நேற்று கைது செய்தது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஓய்வுபெற்ற தலைமை கணக்காய்வாளர் பிஷ்ணுபத்ரா மிஷ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த வங்கி மோசடி தொடர்பான சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #NiravModi #PNBScam #tamilnews